வருசநாடு, செப்.29: கடமலை மயிலை ஒன்றியத்தில் கள்ள மார்க்கெட்டில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுகிறது. தேனி மாவட்டத்தில் கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியம் விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் முக்கிய தொழிலாகக் கொண்டுள்ளது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள் அதிகாலையிலேயே எழுந்து விவசாய மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களைச் செய்கின்றனர். அரசு மதுபான கடைகளை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரை நிபந்தனைக்கு உட்பட்டு விற்பனை செய்ய அரசு அனுமதித்துள்ளது. ஆனால் கடமலை மயிலையில் சிலர் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி சில்லறை விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, மூலக்கடை, குமணன்தொழு, தர்மராஜபுரம், காமராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் குடிமகன்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே போலீசார் கிராமப்புறங்களில் கள்ள மார்க்கெட்டில் மது விற்போரை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.