சத்துணவு ஊழியர் பணியிடம் விண்ணப்பம் வாங்க பெண்கள் குவிந்தனர்

திருமங்கலம், செப். 29: மதுரை மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 358 அமைப்பாளர்கள், 71 சமையலர்கள், 559 சமையல் உதவியாளர்கள் காலிபணியிடங்களுக்கு நேற்று முதல் விண்ணப்பங்கள் தரப்பட்டன. திருமங்கலம் பகுதியில் 16 சத்துணவு அமைப்பாளர், 2 சமையலர், 44 சமையல் உதவியாளர்களுக்கு யூனியன்அலுவலகத்தில் நேற்று காலை முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அமைப்பாளர்களுக்கு 10ம் வகுப்பும், சமையலர்களுக்கு 8ம் வகுப்பும், சமையல் உதவியாளர்களுக்கு 5ம் வகுப்பும் கல்விதகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. சத்துணவு ஊழியர் வேலைக்காக முதல் நாளான நேற்று காலை முதல் மாலை வரை பெண்கள் திரண்டு வந்து விண்ணப்ப படிவங்களை பெற்று சென்றனர். இதுகுறித்து யூனியன் ஊழியர்கள் கூறுகையில், ‘அக்.5ம் தேதி மாலை 5.45 மணி வரையில் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும்’ என்றனர். இதேபோல் திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் 150 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏராளமானோர் யூனியன் அலுவலகம் குவிந்தனர். தற்போது வேலையில்லாத திண்டாட்டத்தால் இளங்கலை, முதுகலை படித்த பட்டதாரி மாணவிகள் விண்ணப்பங்கள் வாங்க குவிந்தனர்.

Related Stories: