குடும்பத் தகராறில் விபரீதம் இரண்டு மகள்களை எரித்து கொன்று தாய் தற்கொலை மதுரையில் பரிதாபம்

மதுரை, செப். 29: குடும்பத்தகராறில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்று விட்டு, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, திடீர் நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (32). இவரது மனைவி தமிழ்ச்செல்வி (28). மகள்கள் வர்ஷிகா (4), வர்ணிகா (2). பாண்டியன் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். சம்பள பணத்தை வீட்டில் கொடுக்காததால் தமிழ்ச்செல்வி குடும்பம் நடத்தவே கஷ்டப்பட்டு வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த பாண்டியன், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். பின் அவரை சரமாரியாக தாக்கி விட்டு வெளியே சென்றார். இதனால் மன உளைச்சலில் இருந்த தமிழ்ச்செல்வி, தூங்கிக் கொண்டிருந்த 2 மகள்கள் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தார். பின்னர் தன் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். 3 பேரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது, குழந்தை வர்ஷிகா உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.

படுகாயமடைந்த தமிழ்ச்செல்வி மற்றும் குழந்தை வர்ணிகாயை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியில் வர்ணிகா பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்த தமிழ்ச்செல்வி, சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார். இதுகுறித்து திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுரையில் குடும்பத்தகராறில் குழந்தைகளை எரித்துக்கொன்று, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: