தெற்கு ரயில்வேக்கு கூடுதல் பொதுமேலாளர்

மதுரை, செப். 29: தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளராக பணியாற்றி வந்த பி.கே.மிஸ்ரா கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்றார். இதனையடுத்து, முதன்மை பண்டக மேலாளர் சண்முகராஜ், கூடுதல் பொதுமேலாளராக (பொறுப்பு) பணியாற்றி வந்தார். இந்நிலையில், தெற்கு ரயில்வேயின் தலைமை மின்பொறியாளராக பதவி வகித்து வந்த பி.ஜி.மல்லையா, கூடுதல் பொதுமேலாளராக நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். டெல்லி ஐஐடி மின்பொறியியல் பட்டதாரியான இவர், 1985ம் ஆண்டு இந்திய ரயில்வே மின்பொறியாளர் சேவை பிரிவில் பணியாற்றியவர். 30 ஆண்டுகளாக தெற்கு ரயில்வே, தென்கிழக்கு மத்திய ரயில்வே, உள்ளிட்டவற்றில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர். இவர் 2004-2005ம் ஆண்டில் மதுரை கோட்டத்தில் முதுநிலை கோட்ட மின்பொறியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தெற்கு ரயில்வே பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவின் இயக்குநராகவும் செயல்படுவார்.

Related Stories: