வேலூர், செப்.26: வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சிறுபான்மையினர் சமுதாயத்தை சார்ந்த முஸ்லிம், கிறித்துவம், ஜெயின், சீக்கியம், பார்சி, புத்தம் ஆகிய இனத்தைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் தங்கள் தொழிலுக்கு தேவையான மூலதன பொருள்களை வாங்கி தொழில் முன்னேற்றம் அடைந்திடும் வகையிலும், புதிதாக கைவினை தொழில் தொடங்கிடவும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம்(டாம்கோ) மூலம் கடனுதவி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விரும்பும் சிறுபான்மையின கைவினைக் கலைஞர்களின் ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ₹98 ஆயிரத்துக்கும் குறைவாகவும், நகர் புறத்தில் ₹1.20 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் அதிகபட்ச கடன் தொகையாக ₹10 லட்சம் வழங்கப்படும்.மேலும் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெறும் ஆண் பயனாளிகளுக்கு 5 சதவீதம் மற்றும் பெண் பயனாளிகளுக்கு 4 சதவீதம் ஆண்டு வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும். பெறப்பட்ட கடனை 5 ஆண்டுகளுக்குள் செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் சேர விரும்பவர்கள் கலெகடர் அலுவலகத்தில் மாவட்ட பிறபடுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.