சிக்கண்ணா அரசு கல்லூரியில் நாற்று பண்ணை அமைக்கும் பணி

திருப்பூர், செப்.26:  திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி என்.எஸ்.எஸ் அலகு-2 சார்பில், கல்லூரி வளாகத்தில் நாற்று பண்ணை நேற்று அமைக்கப்பட்டது. நாட்டு நலப்பணித்திட்டம் (என்.எஸ்.எஸ்) தினத்தை முன்னிட்டு, அலகு -2 மாணவர்கள் புதிய முயற்சியாக கல்லூரி வளாகத்தில் மாணவ செயலர்கள் சந்தோஷ்,  சந்தீப்,  காமராஜ் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நாற்று பண்ணை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் நாற்று பண்ணையை தொடங்கி வைத்து பேசுகையில்,`தமிழகத்தில் கல்லூரி என்.எஸ்.எஸ். மூலம் நாற்றுப்பண்ணை நிறுவுவது இதுவே முதல் முறை. ஏற்கனவே, அலகு-2 சார்பில், கல்லூரி வளாகத்தை சோலையாக மாற்றி உள்ளனர். நிறைய மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்தும் வருகின்றனர். இத்திட்டத்தில், 10,000 மரக்கன்றுகளை உருவாக்கி திருப்பூர் அருகில் உள்ள பகுதிகளில் நடவு செய்வதற்கு மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், நாட்டு மரங்களை வளர்க்க வேண்டும் என்பதற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது’ என்றார்.

அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் கூறுகையில்,`முதல்கட்டமாக, 100 மரக்கன்றுகளை வளர்ப்பதற்கு எற்பாடு செய்துள்ளோம். அதற்காக, மண்புழு உரம் தயாரிக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபடுவார்கள். திருவள்ளுவர் நாற்று பண்ணை என பெயர் சூட்டப்பட்டுள்ள இதனை பாதுகாக்க மாணவர்கள் குழு ஏற்படுத்தப்படும்’ என்றார். இந்நிகழ்ச்சியில், பேராசிரியர்கள் ரபீக், விநாயக மூர்த்தி, பாண்டே, ராஜகோபால், ராஜாராம், விஜயன்,  முன்னாள் மாணவ சங்க பிரதிநிதி கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: