திருப்பூர், செப்.26: வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட 90 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். வேளாண்மை சட்ட திருத்த மசோதாவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் 30க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள், வேளாண் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் விவசாய சங்கங்கள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருப்பூரில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தென்னம்பாளையம் பகுதியில் இருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். வேளாண் மசோதாவை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர்.