ராஜ வாய்க்காலில் திடீர் அடைப்பு நள்ளிரவில் வீடுகளுக்குள் வெள்ளம்; மக்கள் அவதி

கோவை, செப். 26: தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை முத்தண்ணன் குளத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குளத்தில் இருந்து வழிந்தோடும் உபரிநீர், ராஜவாய்க்கல் வழியாக உக்கடம் பெரியகுளம் செல்கிறது.

இந்நிலையில் பொன்னையராஜபுரம் அருகே உள்ள பழனிசாமி காலனி பகுதியில் ராஜவாய்க்கால் நீர்செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு, அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் நேற்று நள்ளிரவு வெள்ளம் புகுந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். மாநகராட்சி ஊழியர்கள், அடைப்புகளை அகற்றி வாய்க்காலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின் வெள்ள நீர் வடிந்தது. இதனையடுத்து மக்கள் அவர்களது வீடுகளுக்கு சென்றனர்.

Related Stories: