ஓடை புறம்போக்கில் வசிக்கும் குடியிருப்புகளை காலி செய்ய நோட்டீஸ்

ஈரோடு, செப்.26: ஈரோட்டில் ஓடைபுறம்போக்கு பகுதியில் வசிக்கும்  குடியிருப்புவாசிகளை காலி செய்யும்படி நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டிருப்பதை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று எம்.எல்.ஏ.க்களிடம் மனு அளித்து முறையிட்டனர்.ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட குயவன்திட்டு பகுதியில் உள்ள ஓடைப்புறம்போக்கில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இதேபோல், பெரும்பள்ளம் ஓடைப்புறம்போக்கு பகுதியில் கட்டப்பட்டுள்ள குடிசைப்பகுதி மாற்று வாரியம் குடியிருப்புகளிலும் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களை காலி செய்யும்படி மாநகராட்சி, வருவாய்துறை மற்றும் குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பல ஆண்டுகளாக வசித்து வரும் தங்களை அந்தப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தக்கூடாது என வலியுறுத்தி, ஈரோடு பெரியார் வீதி தொடக்கப்பள்ளியில் நேற்று நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ள வந்த ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. தென்னரசு, மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. ராமலிங்கம் ஆகியோரிடம் பொதுமக்கள் மனு அளித்து முறையிட்டனர்.

முன்னதாக, மனு கொடுக்க வந்தவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க போலீசார் மறுத்ததையடுத்து ஆத்திரமடைந்த மக்கள், எம்.எல்.ஏ.க்களை முற்றுகையிடப்போவதாக அறிவித்தனர். பின்னர், அவர்களை போலீசார் சமாதானம் செய்து மனு கொடுக்க அனுமதித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ.க்கள், தொடர்ந்து அதே பகுதியில் வசிக்கும் வகையில் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: