மதுரை, செப். 25: மதுரை வனக்கோட்டத்தில் பணியாளர் பற்றாக்குறையால் வனப்பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், நான்கரை ஆண்டுகளில் வனவிலங்குகளை வேட்டையாடுதல், வனச்சொத்துகளை சேதம் செய்த என 3 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதுரை மாவட்ட வனச்சரகத்தில் 3710 சதுர கி.மீ வனப்பகுதி உள்ளது. இந்த வனக்கோட்டத்தில் உசிலம்பட்டி, சோழவந்தான், மதுரை என வனஉயிரின சரகங்கள் உள்ளன. இவைகளில் அரிய வகை உயிரினங்கள் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடுதல், வனச்சொத்துக்களை சேதம் செய்தல், திருட்டு வழக்குகள் என கடந்த நான்கரை ஆண்டுகளில் 3,231 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக மதுரை சரகத்தில் 2,260 வழக்குகள், உசிலம்பட்டி சரகத்தில் 616 வழக்குகள் பதிவாகியுள்ளன. வனத்துறை ஊழியர்களின் எண்ணிக்கை குறைவால், முழுமையாக வனப்பகுதிகளை கண்காணிக்க முடிவதில்லை. இதனால், குற்றவாளிகள் எளிதாக தப்பித்து விடுகின்றனர். இதனால், குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.