×

நகராட்சி, பிடிஓ அலுவலகத்தில் சத்துணவு வேலைக்காக குவிந்த பெண்கள்

நாமக்கல்,  செப்.25: நாமக்கல் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள அரசு  பள்ளிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல்  உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு  வெளிவந்த நிலையில், இப்பணிகளுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்து வருகிறார்கள்.  இதனால் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பெண்களின் கூட்டம் அலை  மோதுகிறது. நாமக்கல் நகராட்சி பகுதிகளில் ஒரு சமையலர், 8 சமையல்  உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் நேற்று  நகராட்சி அலுவலகத்தில் நேற்று வினியோகம் செய்யப்பட்டது.

நாமக்கல் ஒன்றிய பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் 17 சத்துணவு அமைப்பாளர் பணியிடமும்,  2 சமையலர் மற்றும் 36 சமையலர் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலிப்பணியிடங்கள் குறித்த விபரங்கள், நாமக்கல் ஒன்றிய அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு  விண்ணப்பிக்க விரும்புவோர், அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து, ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் ஒப்படைத்து வருகிறார்கள்.  காலிப்பணியிடங்களின் பட்டியலை பார்க்கவும், விண்ணப்பிக்கவும் நேற்று  ஏராளமானோர் வந்து சென்றனர். விண்ணப்பிக்க வரும் 30ம் தேதி கடைசி  நாளாகும். ஏற்கனவே 2 முறை ஆட்தேர்வு அறிவிக்கப்பட்டு, நேர்காணல் வரை  நடத்தப்பட்ட நிலையில், ரத்து செய்யப்பட்டது. தற்போது 3வது முறையாக அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், இந்த முறை எப்படியாவது அரசு பணியில்  சேர்ந்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் விண்ணப்பிக்க வரும் பலரும், அதற்கான  வேலையில் இறங்கியுள்ளனர்.

Tags : Women ,office ,PDO ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது