விளாத்திகுளம், செப். 25: விளாத்திகுளத்தில் இசைமேதை நல்லப்பசாமியின் 132வது குருபூஜையை முன்னிட்டு அவரது சிலைக்கு சின்னப்பன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விளாத்திகுளம் அருகேயுள்ள காடல்குடி ஜமீன் பரம்பரையில் 1889ம் ஆண்டு பிறந்து 75 ஆண்டுகள் வாழ்ந்து தமிழ் மற்றும் கர்நாடக சங்கீதத்துக்கு இசைத்தொண்டாற்றியவர் நல்லப்பசாமி. விளாத்திகுளம் சுவாமிகள் என போற்றப்பட்ட இவரது நினைவாக விளாத்திகுளத்தில் சுமார் ரூ.25 லட்சத்தில் நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் நினைவுத்தூண் வளாகத்தில் இசைப்பள்ளி அமைக்கவும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் நல்லப்ப சுவாமிகளின் 132வது குருபூஜையை முன்னிட்டு விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ சின்னப்பன் தலைமையில் நல்லப்ப சுவாமி சிலை மற்றும் நினைவுத்தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டடது. இதில் விளாத்திகுளம் ஒன்றிய சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ பெருமாள், மேற்கு ஒன்றியச் செயலாளர் நடராஜன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் பால்ராஜ், மாவட்டப் பிரதிநிதி செண்பகபெருமாள், சமூக ஆர்வலர் இளையராஜா மாரியப்பன், வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக தூத்துக்குடி மாவட்டத் தலைவர் வலசை கண்ணன், நல்லப்பசாமி வழித்தோன்றல்கள் கண்ணன், மாரிச்சாமி, வரலாற்று ஆசிரியர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.