உளுந்தூர்பேட்டை, செப். 25: உளுந்தூர்பேட்டை அருகே டயர் வெடித்ததால் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சென்னையை சேர்ந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜோதிடர் சாய்பாலாஜி (49). இவர் தனது நண்பர்களான சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முருகவேல் (53), டி.நகர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராமன் (49) ஆகியோருடன் ஒரு காரில் சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்றனர். இந்த காரை முருகவேல் என்பவர் ஓட்டி வந்தார். கார் நேற்று காலை உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூர் சிட்கோ தொழிற்பேட்டை அருகில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது காரின் டயர் திடீரென வெடித்ததில் கார் நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த சிறுபாலத்தில் மோதி 10 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.