புதுக்கடை, செப்.25: புதுக்கடை அருகே தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் நவாஸ். அவரது மகன் உசேன் (15). ஓட்டல் தொழிலாளி. நேற்றுமுன்தினம் உசேன், அவரது நண்பர் ஷேக் (14) ஆகியோர் மார்த்தாண்டம் அருகில் வெட்டுவெந்நியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் தேங்காப்பட்டணம் நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.பைக் காப்புக்காடு பகுதியில் வரும்போது, எதிரே வந்த ஒரு டிப்பர் லாரியில் மோதியது. இதில் பைக்கின் பின் பகுதியில் அமர்ந்திருந்த உசேன் தூக்கி வீசப்பட்டு, லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். ஷேக் படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.