திருப்பூர், செப். 25: கொரோனாவால் பாதிக்கப்பட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கு கருணை தொகை வழங்க வேண்டும் எனக் கோரி நேற்று வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு நேற்று மனு அனுப்பப்பட்டது. திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, திருப்பூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாகுல் அமீது மூலம் மனு அனுப்பப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது விபத்தில் உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களான, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சேகர், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கண்ணப்பன் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜகோபால் ஆகியோரின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும்.