ஈரோடு, செப்.25: ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் இதுவரை 3.50 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளதாக கமிஷனர் இளங்கோவன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் உள்ள 60 வார்டுகளிலும் கொரோனா தொற்றை கண்டறிய 10 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, குடிசை பகுதி, நோய் பாதிப்பு உள்ள இடங்களில் 5 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு தினமும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முகாமில் சளி, காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டு, அறிகுறி இருப்பவர்கள் கொரோனா பரிசோதனை மையத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இம்முகாம் மூலம் இதுவரை 3.50 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.