×

ஒரே அலுவலகத்தில் 2 வி.ஏ.ஓ.க்கள் பணியாற்றுவதால் மக்கள் கூட்டம் அதிகரிப்பு

ஈரோடு, செப்.25: ஒரே அலுவலகத்தில் 2 கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.) பணியாற்றி வருவதால் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பெருந்துறை வட்டம், வெள்ளோடு உள்வட்டத்தில் தென்முகம் வெள்ளோடு, வடமுகம் வெள்ளோடு என இரண்டு கிராம நிர்வாக அலுவகங்கள் காமராஜர் நகரில் தனித்தனியாக கட்டப்பட்டுள்ளன. ஆனால், கடந்த சில நாட்களாக தென்முகம் வெள்ளோடு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலேயே வடமுகம் வெள்ளோடு அலுவலகமும் செயல்பட்டு வருகிறது
இரண்டு அலுவலகங்களும் ஒரே அலுவலகத்தில் செயல்படுவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால், கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் உறுப்பினர் துரைசாமி கூறியதாவது: இரண்டு கிராம நிர்வாக அலுவலகத்திற்கும் தனித்தனியே கட்டிடம் கட்டப்பட்டு அலுவலகம் செயல்பட்டு வந்தது. ஆனால், சமீபகாலமாக ஒரே அலுவலகத்தில் இரண்டு கிராம நிர்வாக அலுவலர்களும் பணியாற்றுவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. ஒரே இடத்தில் மக்கள் கூடுவதால் எளிதில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக, பல முறை வருவாய்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் அவரவர் அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு துரைசாமி கூறினார்.

Tags : VAOs ,office ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...