சித்த மருந்துகளுக்கு மவுசு அதிகம் கொரோனா பாதிப்பால்

திண்டுக்கல், ஆக. 22: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த நிலையில், தற்போது பாதிப்பு குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு பிறகு சித்தா மருத்துவமனை, தமிழ் மருந்து கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்த மருந்துகள்- தமிழகத்தில் இயற்கையாக பயன்படுத்தப்பட்டு வரும் கிராமத்து மருத்துவ முறைகள் பலன் கொடுப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் இஞ்சி, விரலி மஞ்சள், சீரகம், மிளகு உள்ளிட்ட பொருட்களே கொரோனா வைரஸ் தடுப்பிற்கான நோய் எதிர்ப்பு சக்திக்காக பரிந்துரைக்கப்படுகிறது.

கிராமங்களில் உள்ளவர்கள் இப்பொருட்களை ஏற்கனவே அதிகம் பயன்படுத்தி வந்த தற்போது நிலையில் நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் கபசுர குடிநீருக்கான பொடி, நிலவேம்பு பொடியை அரசு சித்தா மருத்துவமனை, தமிழ் மருந்துக்கடைகளில் வாங்கி வருகின்றனர்.  இதுபற்றி பொதுமக்கள் கூறியதாவது, ‘கொரோனாவால் மீண்டும் சித்த மருந்துகளை நாடும் நிலை வந்துள்ளது. தற்போது காய்ச்சல், சளிக்கு இந்த பொடிகளையே கொடுத்து வருகிறோம். முன்பு கசப்பான நிலவேம்பு பொடிகளை மிகவும் சிரமப்பட்டு குழந்தைகளுக்கு கொடுப்போம். தற்போது சற்று எளிதாகவே குடித்து வருகின்றனர். மீண்டும் நம்முடைய பாரம்பரியமான உடலுக்கு பக்க விளைவுகள் இல்லாத சித்த மருந்துகளை தேடிச்செல்வது மகிழ்ச்சியே’ என்றனர்.

Related Stories: