இ-சேவை மையங்களில் ஆதார் பணிகள் நிறுத்தி வைப்பு

ஈரோடு, ஆக.22: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, அந்தியூர், கோபி, சத்தி, பெருந்துறை உள்பட 10 தாலுகா அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம், ஈரோடு மாநகராட்சி மெயின் அலுவலகம் மற்றும் 4 மண்டல அலுவலகங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்களில் இ-சேவை மையங்கள் மூலம் ஆதார் சேவை பிரிவு செயல்பட்டு வந்தது.  கொரோனா பரவல் காரணமாக, இ-சேவை மையங்கள் மூடப்பட்டன. பின்னர் தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து இ-சேவை திறக்கப்பட்டன. ஆனால், ஆதார் பிரிவில் கைரேகைகள் பதிவு, கருவிழி ஸ்கேன் செய்வது உள்ளிட்ட காரணங்களால் எளிதில் தொற்று பரவும் சூழல் உள்ளதாக கூறி ஆதார் பிரிவு அலுவலகங்கள் மட்டும் செயல்பட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதனால், ஆதார் திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். குறிப்பாக, தற்போது பள்ளி, கல்லூரிகளில் அட்மிஷன் நடைபெற்று வரும் நிலையில் ஆதார் கார்டு அவசியம் தேவைப்படுகிறது. தற்போது, ஆதார் பிரிவு மூடப்பட்டுள்ளதால் ஆதார் கார்டில் முகவரி மாற்றம், திருத்தங்கள் உள்ளிட்டவை மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வெளியிடங்களில் தனியார் சார்பில் ஆதார் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால், அங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் சூழலில் அரசின் இ-சேவை மையங்களில் செயல்பட்டு வந்த ஆதார் பிரிவு அலுவலகம் பயனுள்ளதாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.  எனவே, மூடப்பட்டுள்ள ஆதார் பிரிவு அலுவலகத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: