×

கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து மாவட்ட தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் ஆய்வுக் கூட்டம்

காஞ்சிபுரம், மார்ச் 20: கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து, கலெக்டர் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து காஞ்சிபுரம் மாவட்ட தொழிற்சாலை பிரதிநிகளுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து தொழிற்சாலை பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு அலுவலர்கள் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு தினமும் வரும் பணியாளர்கள் அனைவருக்கும் கைகழுவும் திரவம் கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ளும் முறை குறித்து அறிவுறுத்த வேண்டும். தடுப்பு நடவடிக்கையாக தொழிற்சாலைகளில் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

தொழிற்சாலைகளில் அன்றாடம் பயன்படுத்தும் தொழில்நுட்ப கருவிகளில் கிருமிநாசினி கொண்டு தூய்மைபடுத்த வேண்டும் என பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் தொழிற்சாலையில் உள்ள உணவகங்கள், கலந்தாய்வு கூடங்கள், பணியாற்றும் இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்து பணியாளர்களிடம் இருந்து புகார்களை பெற கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாடு அறை தொலைபேசி 044-27237107, 044-27237207 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பொன்னையா தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், சுற்றுச்சூழல் ஆய்வாளர் சசிகுமார், இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) ஜீவா, துணை இயக்குனர்  (சுகாதாரப் பணிகள்) பழனி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Study meeting ,district factory representatives ,
× RELATED வரும் 21, 22ம் தேதிகளில் முதல்வர்...