×

மணல் தேங்குவதை தடுக்க பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் ₹27 கோடியில் நிரந்தர தடுப்புச்சுவர்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை, மார்ச் 20: பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் மணல் தேங்குவதை தடுக்க ரூ.27 கோடி செலவில் நிரந்தர தடுப்புச்சுவர் அமைக்கவுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி ஆண்டிகுப்பம் பகுதியை சேர்ந்த மீனவர் உஷா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த  வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார்  ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது, தமிழக அரசு தரப்பில், ஆஜரான வக்கீல் போத்திராஜ், பழவேற்காடு ஏரி முகத்துவராத்தில் தேங்கி இருந்த மணல் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது.

 அப்பகுதியில் மணல் சேராமல் தடுக்க ரூ.27 கோடி செலவில் நிரந்தர தடுப்புச் சுவர் அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக மாநில கடலோர ஒழுங்கு முறை ஆணைய அனுமதியும், சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான அனுமதியும் பெறப்பட்டுள்ளது.   திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனுமதி கோரி மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு தரப்பின் இந்த வாதத்தை பதிவு செய்து திட்டத்திற்காக பெறப்பட்ட அனுமதி குறித்தும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் நிலுவையில் உள்ள அனுமதி கோரிய விண்ணப்பத்தின் நிலை குறித்தும் 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.

Tags : estuary ,Pulverkad Lake ,government ,Tamil Nadu ,
× RELATED முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து...