கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி வெறிச்சோடிய களக்காடு தலையணை

களக்காடு, மார்ச் 20: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் களக்காடு தலையணை வெறிச்சோடி காட்சி அளிக்கிறது.சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளையே புரட்டி போட்டுள்ளது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக சுற்றுலா தளங்களை மூடவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணை சுற்றுலா ஸ்தலம் மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தலையணை பகுதி ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் களக்காட்டில் பொதுமக்கள் கூடும் இடங்களில் பேரூராட்சி நிர்வாகத்தினர் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர். வெளியூர்களில் இருந்து களக்காடு வரும் பஸ், ஆட்டோ, உள்ளிட்ட வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: