நெல்லை, மார்ச் 20: வைகுண்டம் பேரூராட்சியில் இளநிலை உதவியாளருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. நெல்லை மாவட்டம், பணகுடியை சேர்ந்த ஷேய்க் மதார் மகன் ஷேக் அஹமத் அரபாத் (27). வைகுண்டம் பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்தபோது அங்கு வந்த வைகுண்டத்தை சேர்ந்த பெருமாள் மகன் தங்கவேல் (30) என்பவர் தரக்குறைவாகப் பேசியதோடு கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்டினார். இதில் இடது கை தோளில் வெட்டுப்பட்ட ஷேக் அஹமத் படுகாயம் அடைந்தார். இருப்பினும் தங்கவேல், அங்கிருந்த நாற்காலி , மேசை ஆகியவற்றை சேதப்படுத்திவிட்டு தப்பியோடினார்.
இதையடுத்து மீட்கப்பட்ட ஷேக் அஹமத் அரபாத் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த வைகுண்டம் எஸ்ஐ சந்திரகுமார், தப்பியோடிய தங்கவேலை போலீசார் தேடிவருகின்றனர். இதையடுத்து வைகுண்டம் டிஎஸ்பி சுரேஷ் குமார் பேரூராட்சி அலுவலக சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதே போல் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் பேரூராட்சி அலுவலக பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர்.