திருச்சி, மார்ச் 20: உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் 31ம் தேதி வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று நடக்கவிருந்த பூச்சொரிதல் விழா வேறொரு நாளில் நடத்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசால் கொரோ னா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு தேசிய பேரிடர் என்று அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பக்தர்களின் நலன் கருதியும் உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய இன்று (20ம் தேதி) முதல் வரும் 31ம் தேதி வரை அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. கோயில் பழக்க வழங்கங்கள் மற்றும் ஆகம விதிகளின்படி அனைத்து பூஜைகளும் வழக்கம் போல் நடக்கும்.
இதனால் இன்று (20ம் தேதி) நடக்க இருந்த பூச்சொரிதல் விழா விழா நிர்வாகிகள், அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்களை கலந்து வேறு ஒரு நாளில் நடத்தப்படும். இதனால் பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.