சுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்

பழநி, மார்ச் 20: கொரோனா வைரஸ் பீதியால் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்கள் போலீசாரால் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் போன்றவைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. பொது இடங்களில் பொதுமக்கள் கூட வேண்டாம். தேவையில்லாத வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டுமென அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிமாநிலத்தவர் அதிகளவில் வரும் கோடை வாஸ்தலமான கொடைக்கானல் சுற்றுலா இடங்கள் மூடப்பட்டுவிட்டன.

கொடைக்கானல் சாலையிலேயே தற்போது வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பழநி-கொடைக்கானல் சாலையில் தேக்கந்தோட்டம் பகுதியில் போலீசார் மற்றும் வனத்துறையினரால் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளன. இங்கு கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. உள்ளூர் மற்றும் அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. கொடைக்கானலில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் யாவும் மூடப்பட்டு விட்டதாகவும், லாட்ஜ்கள் மற்றும் ஓட்டல் வசதிகள் போதிய அளவு இல்லை என்று விளக்குவதால் சுற்றுலா பயணிகளே திரும்பிச் சென்றுவிடுகின்றனர்.

Related Stories: