சேலம், மார்ச் 20: சேலத்தில் காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட், நகைக்கடைகள் மூடல் என்று வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.சேலத்தில் நேற்று மாலை, சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவியது. அதில், “கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைவதால், பாதுகாப்பு கருதி மக்கள் அதிகம் இருக்கும் பகுதிகளான சேலம் பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட், நகைக்கடைகள் மற்றும் சுற்றியுள்ள கடைகள், நாளை (இன்று) முதல் 7 நாட்கள் அடைக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்,’’ என பரப்பப்பட்டது.
இதுபோன்ற அறிவிப்பை சேலம் மாவட்ட கலெக்டர் வெளியிடவில்லை. அதனால், வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். வதந்தி பரப்பியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ராமன் எச்சரித்துள்ளார்.