×

கொரோனா தடுப்பு நடவடிக்கை நாமக்கல்லில் ஜவுளிக்கடைகளை மூடுவதில் அதிகாரிகள் பாரபட்சம்

நாமக்கல், மார்ச் 20:கொரோனா தடுப்பு நடவடிக்கையில், நாமக்கல்லில் ஜவுளிகடைகளை மூடுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டி வருவதால், பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள், வாரசந்தைகள், கால்நடை சந்தைகள், சினிமா தியேட்டர்கள், பூங்காக்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டு விட்டன. மாவட்டத்தில் உள்ள பெரிய ஜவுளிக்கடைகள், வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுக்களை மூடும்படி மாவட்ட கலெக்டர் மெகராஜ் அரசுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். ஆனால் நாமக்கல் நகரில் அதிகாரிகள் தங்கள் விருப்பப்படி கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளனர்.

நாமக்கல்- சேலம் ரோட்டில் உள்ள பிரபல ஜவுளிக்கடைகள் அனைத்தும், நேற்று முன்தினமே மூடப்பட்டு விட்டது. இங்கு வேலை செய்து வந்த 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் நாமக்கல் கடைவீதியில் செயல்படும் பிரபல ஜவுளிகடையான சீனிவாசா கார்ப்பரேசன்  தொடர்ந்து இயங்கி வருகிறது. இந்த கடை குறுகிய பகுதியான கடைவீதியில் அமைந்துள்ளது. கடைவீதியில் ஏராளமான நகைக்கடைகள், பாத்திர கடைகள் இருக்கிறது. எப்போதும் கடைவீதியில் உள்ள ரோட்டில் 200 பேருக்கு மேல் நடந்து செல்வார்கள். குறிப்பிட்ட ஜவுளி கடையிலும் மக்கள் அதிகம் கூடுவார்கள். ஆனால் ஊரெங்கும் கொரோனா ரைவஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், நகரில் மக்கள் அதிகம் கூடும் பகுதியில் உள்ள கடைகளை மூட எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் நகரில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் 5க்கு விற்பனை   செய்யப்பட்ட முக கவசம் (மாஸ்க்) தற்போது 30 முதல் 35 வரை நகரில் உள்ள மெடிக்கல் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது. கைகழுவ பயன்படுத்தப்படும் ஹேன்ட்வாஸ் திரவம் 100 மில்லி 90க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் வரை இந்த திரவத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை. தற்போது அதன் மவுசு அதிகரித்துள்ளதால், மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளர்கள் தங்கள் இஸ்டத்துக்கு விலை உயர்த்தி விற்பனை செய்து வருகிறார்கள்.

Tags : Coroner Prevention Officers ,Closing ,Namakkal ,
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை