புதுச்சேரி, மார்ச் 20: கொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். கூலி தொழிலாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டுமென அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:உலகத்தையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் என்ற கொடிய தொற்றுநோய் இந்தியாவுக்கும் வந்திருப்பது கவலையளிக்கிறது. மத்திய அரசாங்கம் பேரிடர் நிலையாக அறிவிக்கும், அளவுக்கும் நாள்தோறும் நிலைமை மோசமாகி கொண்டிருக்கிறது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி பல்வேறு மாநில அரசுகளும் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதுபோல், புதுச்சேரி அரசு போர்க்கால அடிப்படையில் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில் சாதாரண நோய்களுக்கே மருந்து மாத்திரைகள் இல்லை என்பதால், கொரோனாவை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என மக்கள் அச்சத்தில் உள்ளார்கள்.இந்நிலையில் தனியார் மருத்துவமனைகள் நிர்வாகிகளை கூட்டி எல்லா மருத்துவமனைகளிலும் சிறப்பு சிகிச்சைகளுக்கு பிரிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கும், செவிலியர் மற்றும் பணியாளர்களுக்கும் தேவையான கொரோனா வைரசை தடுக்கும் கவச உடைகள் வாங்கப்பட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு பொது இடங்களிலும், ரேஷன் கடைகளில் இலவசமக முகக்கவசங்கள், கிருமிநாசினி, சோப்புகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் குழுக்கள் மூமமாக வினியோகம் செய்ய முயல வேண்டும். மாநில எல்லைகளில் நுழையும், அனைத்து ரயில் பேருந்து பயணிகளுக்கும் சோதனை கருவிகள் வைத்து சோதனைகளை முறையாக செய்யப்பட வேண்டும். புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளில் உள்ள தெருக்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். பொதுமக்களுக்கு நோய் தடுப்பு குறித்துய் விழிப்புணர்வினை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.