திருப்பூர், மார்ச் 20: திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் சார்பில் அனைத்து தொழில் அமைப்புகளின் கூட்டம் சங்கத்தின் தலைவர் ராஜா சண்முகம் தலைமையில் நடந்தது. சைமா தலைவர் வைக்கிங் ஈஸ்வரன், நிட்மா தலைவர் அகில் ரத்தினசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் விஜயகுமார் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: கொேரானா வைரஸ் திருப்பூரில் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து நிறுவனங்களிலும் உடனடியாக பாதுகாப்பு அம்சங்களை கடைபிடித்து தொழிலாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி தொடர்ந்து வேலை செய்வது, மத்திய, மாநில அரசாங்கத்திடம் வங்கி கடன் மற்றும் வட்டி, இ.எஸ்.ஐ., பி.எப்., ஜி.எஸ்.டி., மற்றும் டி.டி.எஸ். ஆகியவற்றை கட்டுவதற்கு உண்டான கால அவகாசம் கோருவது,தொடர்ந்து தொழில் நடத்துவதற்காக புதிய வங்கி கடன் வழங்க வேண்டும். புதிதாக வேலைக்கு வரும் தொழிலாளர்களை உடல் பரிசோதனை செய்து வேலையில் சேர்ப்பது. அனைத்து தொழில் நிறுவனங்களும் உடனடியாக பாதுகாப்பு அம்சங்களை சீரிய முறையில் அமல்படுத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர். கூட்டத்தில் பின்னலாடை உற்பத்தியாளர்கள், நிட்டிங், சாய ஆலை உரிமையாளர்கள், பிரிண்டிங் உரிமையாளர்கள் உட்பட பல்வேறு பிரிவு தொழில் முனைவோர்கள் பலர் கலந்துகொண்டனர்.