திருச்சி, மார்ச் 19: கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தனிமைப்படுத்திக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரானா நோய் தொற்று குறித்து அறிந்து கொள்ளவும், சிகிச்சை குறித்து தகவல்கள் பெறவும் திருச்சி அரசு மருத்துவமனையில் 4 இடங்களில் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.குழந்தைகள் வார்டு, பார்வையற்றோர் மையம், அவசர சிகிச்சை பிரிவு உள்பட 4 இடங்களில் இந்த தவகல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. தலா 2 பேர் வீதம் நான்கு மையங்களிலும் 8 பேர் சுழற்சி முறையில் பணியாற்றுவர். இவர்கள் இந்த மையத்தில் இருந்து மக்களுக்கு தேவையான தகவல்களை அளிப்பர். மேலும் தகவல்களுக்கு 104 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.