புதுச்சேரி, மார்ச் 19: உலகம் முழுவதும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. இந்தியாவிலும் இந்நோயின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. புதுச்சேரி மாநிலம் மாகேவில் மூதாட்டி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பரவாமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு முகக்கவசம், கை கழுவும் திரவம் வழங்கப்பட்டது. இதனை அமைச்சர் ஷாஜகான் வழங்கினார். நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.