மாணவர்களின் வீடுகளுக்கு சென்று விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும்

புதுச்சேரி, மார்ச் 19:   புதுச்சேரி உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பத்துறை இயக்குனர் யாசம் லட்சுமி நாராயண ரெட்டி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: கொரோனா வைரஸ் கோவியட் 19 பரவுவதையொட்டி கல்லூரிகளுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட நாட்களில் கல்லூரி ஆசிரியர்கள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கல்வியமைச்சர் தலைமையில் செயலர், இயக்குநர் மற்றும் கல்லூரி முதல்வர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. கல்லூரி ஆசிரியர்கள், ஒவ்வொரு மாணவரின் வீடுகளுக்கும் சென்று கோவியட் 19 வைரஸ் பற்றிய விழிப்புணர்வை அவர்களது குடும்பத்தினருக்கு ஏற்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு சுற்றுப்புற பகுதி மக்களுக்கு அதுபற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும். கொரோனா விழிப்புணர்வு வீடியோ உள்ளிட்ட டிஜிட்டல் தகவல்களை மாணவர்களின் குழுக்களுக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் இதுபோல் 5 வீடியோக்களையாவது அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும், பழுதான மரப்பொருட்களை சரி செய்வது, சிறிய மின்வேலைப்பாடுகள், ஆய்வக பொருட்களை சரிசெய்தல், சுத்தம் செய்தல், பெயிண்ட் அடித்தல் உள்ளிட்ட பணிகளை முடிக்க திட்டமிட வேண்டும். இது தொடர்பான மறுஆய்வு கூட்டம் வரும் 24ம் தேதி மாலை 4.30 மணிக்கு உயர்கல்வித்துறை அலுவலகத்தில் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: