×

சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்ற வெளிமாநிலத்தவர்கள்

புதுச்சேரி,  மார்ச் 19:   சுற்றுலா நகரங்களில் ஒன்றான புதுச்சேரிக்கு  வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பயணிகள் வந்து செல்வது  வழக்கம். தற்போது கொரோனா பீதி காரணமாக புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின்  வருகை வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும் அண்டை மாநிலங்களில் கொரோனா  பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தமிழகம்  மற்றும் புதுச்சேரியில் தஞ்சமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 இதன் காரணமாக புதுச்சேரி ரயில் நிலையத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்த  வேண்டுமென பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. வாரந்தோறும்  புதுச்சேரியில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு  வருகின்றன. யஸ்வந்த்பூர், ஹவுரா, மங்களூர், தாதார், சென்னைக்கு ரயில்கள்  இயக்கப்படும் நிலையில் அங்கிருந்து வடமாநிலத்தவர்கள் அதிகளவில்  புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர். கோவா, பாலக்காடு, தலச்சேரி, மாகே,  பீகார், ஓசூர், நெல்லூர், புவனேஸ்வர், டெல்லி, விஜயவாடா, ஆக்ரா,  உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் புதுச்சேரிக்கு வருகின்றனர். எனவே சிறப்பு மருத்துவக்  குழுக்களை கொண்டு பயணிகளை பரிசோதித்த பிறகே நகருக்குள் அனுமதிக்க வேண்டுமென  கோரிக்கை வலுத்துள்ளன. இதற்கிடையே  புதுச்சேரியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம், மருத்துவக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.  பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் மட்டும் வெளிமாநிலத்தை சேர்ந்த 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  

இவர்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால்  அவர்கள் தங்களது மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர். அதேபோல் கட்டிடப்பணிகள், மார்க்கெட்டில் பணியாற்றுபவர்களும் சொந்த மாநிலத்துக்கு திரும்பி செல்கின்றனர். இதனால் புதுச்சேரி ரயில் நிலையத்தில் வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயிலுக்காக முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். நேற்று மதியம் ஹவுரா செல்லும் ரயிலில்  ஆயிரக்கணக்கானோர் முக கவசம் அணிந்தபடி புறப்பட்டு சென்றனர்.

Tags : exiles ,
× RELATED வெளிநாடு செல்ல தடை விதிக்கும்...