இருமாநில போலீசார் இணைந்து செயல்பட முடிவு

வில்லியனூர், மார்ச் 19:   வில்லியனூர் மேற்கு எஸ்பி அலுவலகத்தில் இருமாநில எல்லையோர சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. மேற்கு எஸ்பி ரங்கநாதன் தலைமை தாங்கினார். விழுப்புரம் டிஎஸ்பி சங்கர் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் ஜெயசங்கர் (கண்டமங்கலம்), ரேணுகாதேவி (விழுப்புரம்), விஜி (விக்கிரவாண்டி), பழனிவேல் (வில்லியனூர்), கணேசன் (நெட்டபாக்கம்), சத்தியநாராயணன் (திருக்கனூர்) மற்றும் இரு மாநிலங்களை சேர்ந்த 25 எஸ்ஐக்கள், கிரைம் போலீசார் கலந்து கொண்டனர்.  

புதுச்சேரி- தமிழக போலீஸ் எல்லை பகுதியில் போதை பொருள் கடத்தல், விற்பனை செய்வோர், சாராயம், மது கடத்துவோர் குறித்த தகவல் பரிமாற்றம், ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு வாரண்ட் குற்றவாளிகள், தேடப்படும் குற்றவாளிகள், வழிப்பறி, பைக் திருட்டுகளில் ஈடுபடும் குற்றவாளிகள் குறித்த தகவல்களை பரிமாறினர். சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை முழுமையாக கட்டுப்படுத்தவும், திருட்டு, வழிப்பறி, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களை தடுக்க இரு மாநில போலீசார் இணைந்து செயல்படுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் இரு மாநில எல்லையோர பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களை  உடனுக்குடன் தகவல் பரிமாற்றம் செய்வதற்காக போலீஸ் வாட்ஸ்-அப் குரூப்  புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories: