×

குளத்தூர் அருகே தெருவிளக்குகள் எரியாததால் 3 வாரங்களாக இரவில் இருளில் மூழ்கும் கிராமம் ஊராட்சி கவனிக்குமா?

குளத்தூர், மார்ச் 19:  குளத்தூர் அடுத்த தருவைகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட அனந்தமடம் கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் விவசாயம், உப்பளத் தொழில் செய்து வருகின்றனர். இங்குள்ள தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகள் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் பழுதாகியும் உடனடியாக சரிசெய்யப்பட்டவில்லை. இவ்வாறு தெருவிளக்குகள் எரியாததால் கிராமமே கடந்த 3 வாரங்களாக இரவில் இருளில் மூழ்கும் அவலம் தொடர்கிறது. இதுதொடர்பான ஊராட்சி நிர்வாகத்திற்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும் பல முறை தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 மேலும் அவர்கள் கூறுகையில், ‘‘இதுகுறித்து அதிகாரிகளிடம் தொடர்புகொண்டால் புதிதாக மின்மீட்டர் பொருத்த வேண்டியுள்ளதால் தெருவிளக்கு சரிசெய்யும் பணியில் தாமதம் நிலவுவதாக கூறி வருகின்றனர். ஆனால், 3 வாரங்களை கடந்தபிறகும் மீட்டர் பொருத்தும் பணிக்கான எந்தவொரு முயற்சியும் இதுவரை இல்லை. இதனால் தெருவில் இரவில் இருள்மண்டும் நேரங்களில் நடமாடவே அச்சமாக உள்ளது. எனவே, இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினரும், உயர் அதிகாரிகளும் இனியாவது தனிக்கவனம் செலுத்தி துரித நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும். இதுவே அனைவரது எதிர்பார்ப்பு’’ என்றனர்.

Tags : Klathoor ,
× RELATED குளத்தூர் அருகே தருவைகுளம் மிக்கேல் அதிதூதர் ஆலயதிருவிழாவில் தேர் பவனி