திருப்பூர், மார்ச் 19: திருப்பூர் பெரியார் காலனியில் பஸ் ஸ்டாப் இருந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்பூர் அவினாசி ரோடு பெரியார் காலனி பஸ் ஸ்டாப்பில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிழற்குடை அகற்றப்பட்டது. பின்னர் பல ஆண்டாக புதிதாக அமைக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் வெயில் மற்றும் மழையால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நிழற்குடை இருந்த இடம் தற்போது, ஆக்கிரமிப்புகளால் மாயமாகி உள்ளது. அருகில் உள்ள கடை உரிமையாளர்கள் தங்களது விளம்பர போர்டு மற்றும் பொருட்களை போட்டு ஆக்கிரமித்துள்ளனர். மேலும், கடைக்கு பொருட்களை கொண்டு வரும், வேன்கள் பஸ் ஸ்டாப்பில் நிறுத்தப்படுவதால், பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் நடு ரோட்டில் நின்றுதான் பஸ் ஏற வேண்டியுள்ளது.