பொள்ளாச்சி, மார்ச் 19: சீனாவில் பரவ துவங்கிய கொரோனா வைரஸானது, பல்வேறு நாடுகளில் பரவி உயிர்பலி வாங்கியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் 3 பேர் இறந்ததாக தெரிகிறது. மேலும் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதில் அண்டை மாநிலமான கேரள அருகே தமிழக எல்லையில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளாவிலிருந்து பொள்ளாச்சி வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. அதிலும், கேரள மாநிலத்திலிருந்து பொள்ளாச்சி நோக்கி பயணிகளை ஏற்றி வரும் பஸ்கள் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பது தொடர்கிறது. மேலும், நகர் மற்றும் கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது.
இதில் நேற்று, நகராட்சி சார்பில் மத்திய மற்றும் புதிய பஸ் நிலையங்களுக்கு வந்து சென்ற பயணிகள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வினியோகிக்கப்பட்டது. நாளை முதல் நகராட்சிக்குட்பட்ட குடியிருப்புகளில் நேரடியாக சென்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்படுவதாகவும், இந்த பணி இன்னும் சில வாரங்களுக்கு தொடர்ந்திருக்கும் என நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். அதுபோல் பாலக்காடுரோட்டில் உள்ள உழவர் சந்தைக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு, கொரோனா வைரஸ் குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.