×

வரி செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும்

சென்னிமலை, மார்ச் 19:  சென்னிமலை அனைத்து வணிகர் சங்கம், வணிகர் நல அறக்கட்டளை மற்றும் சென்னிமலை பேரூராட்சி வரி செலுத்துவோர் சங்கம் சார்பாக அதன் தலைவர் ரமேஷ், செயலாளர் அன்பழகன் ஆகியோர் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசால் தேசிய பேரிடர் என்று அறிவிக்கப்பட்டு அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் எடுக்கும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளுக்கு பொதுமக்களும், வணிகர்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.

சென்னிமலை வணிகர்களுக்கு தொடர்புடைய ஈரோட்டில் வாரந்தோறும் கூடும் ஜவுளி சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வணிகர்களும் பொதுமக்களும் அன்றாட அத்தியாவசிய தேவைகளை மேற்கொள்ள பொருளாதார ரீதியாக சிரமத்திற்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை ஏற்படுமோ? என்ற அச்சத்தில் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய நடப்பு ஆண்டிற்கான சொத்து வரி, குடிநீர் வரி போன்ற வரி இனங்களையும் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகைகளையும், செலுத்துவதற்கு 2 மாத கால அவகாசம் தரவேண்டும் என பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் சார்பாக தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

Tags :
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு