×

கருங்கல் அருகே லோன் வாங்கி தருவதாக பெண்ணிடம் ₹5 லட்சம் மோசடி

கருங்கல், மார்ச் 18:  கன்னியாகுமரி  மாவட்டம் கருங்கல் அருகே இளம்பெண்ணிடம் லோன் வாங்கி தருவதாக ₹5 லட்சம்  மோசடி செய்த போலி வங்கி அதிகாரி கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம்  திருவனந்தபுரம் கரமனை பகுதியை சேர்ந்தவர் கவிதா(35). திருவனந்தபுரத்தில்  உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி  2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே கருங்கல் காவல் நிலையத்தில் ஒரு புகார்  மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு  குடும்பத்துடன் கருங்கல் அருகே குறும்பனை படிக்கல் பீச் பகுதிக்கு வந்தேன்.  அப்போது எட்வின் லாரன்ஸ் ராஜா(55) என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் தன்னை ஒரு  தேசிய வங்கியில் மேலாளராக இருப்பதாகவும், லோன் வழங்கும் முகாம்  நடப்பதாகவும், உங்களுக்கும் லோன் தர முடியும். லோன்  வேண்டுமானால் அலுவலகத்துக்கு வாருங்கள் என்று கூறினார். இதை நம்பிய நான் கடந்த  அக்டோபர் மாதம் அவரது அலுவலகத்துக்கு சென்றேன். அப்போது ₹20 லட்சம் லோன்  வேண்டும் என்று கேட்டேன். அவர் ₹5 லட்சம் செலவாகும். லோன் கிடைக்கும்  போது ₹4.50 லட்சம் திருப்பி கிடைத்து விடும் என்று கூறினார். அவரது  பேச்சை நம்பி  ₹5 லட்சம் கொடுத்தேன். பணத்தை  பெற்றுக்கொண்டவர் ஒரு வாரத்தில் லோன் வந்துவிடும் என்று கூறினார். ஆனால்  அவர் கூறியபடி லோன் கிடைக்கவில்லை. எனவே மீண்டும் அவரை சந்திக்க சென்றேன். தொடர்ந்து காலம் கடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் 13ம்  தேதி நாகர்கோவிலில் உள்ள அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று கூறி காரில்  அழைத்து சென்றார். காரில் செல்லும்போது என்னை மானபங்க படுத்தி தவறாக நடக்க  முயன்றார். நான் எதிர்த்ததால் ஆத்திரம் அடைந்தவர் என்னை மிரட்டினார்.  சுதாரித்துக் கொண்ட நான் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டேன். என்னை  ஏமாற்றிய எட்வின் லாரன்ஸ் ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அவருக்கு நான் கொடுத்த பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இதையடுத்து  எட்வின் லாரன்ஸ் ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து  கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும்  தகவல்கள் வெளியாகின.  பல மணிநேரம் நடந்த விசாரணையில் எட்வின் லாரன்ஸ் ராஜா, வங்கி அதிகாரி இல்லை என்பது தெரியவந்தது. ஆகவே தவறான  தகவலை கூறி மோசடி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார்   கைது செய்தனர். பின்னர் இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கோர்ட் உத்தரவுப்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த  சம்பவம் கருங்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Karungal ,
× RELATED கருங்கல் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்