×

வாகன விபத்தில் 2 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து கல்குவாரி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

செய்யூர், பிப். 28:  கல்பாக்கம் அருகே நேற்று முன்தினம் ஆட்ேடா மீது கல்குவாரி லாரி மோதி 2 பேர் இறந்தனர். இதனை கண்டித்து, பவுஞ்சூர் சுற்று வட்டாரத்தில் இயங்கும் கல்குவாரிகளை மூட வலியுறுத்தி நேற்று காலை பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. கல்பாக்கம் அருகே கூவத்தூரில் இருந்து பவுஞ்சூர் நோக்கி நேற்று முன்தினம் மதியம் ஒரு ஷேர் ஆட்டோ புறப்பட்டது. டிரைவர் செல்வம் (28) ஆட்டோவை ஓட்டினார். அதில், ஜல்லிமேடை சேர்ந்த தணிகைவேல் (33) உள்பட 5 பேர் பயணம் செய்தனர். கிழக்கு கடற்கரை சாலை கண்டிகை அருகே ஆட்டோ சென்றபோது, எதிரே கல்குவாரியில் இருந்து ஜல்லிக்கற்களை ஏற்றி கொண்டு வேகமாக வந்த லாரி, ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இதில் டிரைவர் செல்வம், பயணி தணிகைவேல் ஆகியோர் பலியாகினர். இதை பார்த்ததும், லாரி டிரைவர் தப்பிவிட்டார். புகாரின்படி அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை பெண்கள் உள்பட 200க்கு மேற்பட்டோர் கூவத்தூர் - பவுஞ்சூர் நெடுஞ்சாலை, நெல்வாய்பாளையம் கூட்ரோட்டில் திரண்டனர். அங்கு, பவுஞ்சூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இயங்கும் கல்குவாரிகளை மூட வேண்டும் என வலியுறுத்தி கல்குவாரிகளுக்கு வந்த லாரிகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பரபரப்பு நிலவியது.

தகவலறிந்து மதுராந்தகம் ஆர்.டி.ஓ லட்சுமிபிரியா,  செய்யூர்  தாசில்தார் சுந்தர், மதுராந்தகம் டிஎஸ்பி மகேந்திரன், அச்சிறுப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சரவணன்  ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, சாலை மறியலில் ஈடுபட்ட  பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, பவுஞ்சூர் பகுதியில் செயல்படும் கல்குவாரிகளுக்கு இயக்கப்படும் லாரிகள் அதிவேகத்தில் செல்கின்றன. இதனால், அடிக்கடி பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதேபோல் நேற்று (நேற்று முன்தினம்) ஷேர் ஆட்டோ மீது, ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி மோதியதில், 2 வாலிபர்கள் இறந்தனர். அவர்களது குடும்பத்துக்கு, அதிகாரிகள் என்ன செய்ய போகிறார்கள்.கல்குவாரிகளை மூட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கல்குவாரிகளை சேர்ந்தவர்கள் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, குவாரிகளை மூடினால், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்கும். அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். அதற்கு அதிகாரிகள், பவுஞ்சூர் பகுதியில் இயங்கும் கல்குவாரிகளை உடனடியாக மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்று கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.

Tags : vehicle accident ,
× RELATED தூய்மை பணியாளர் விபத்து இழப்பீடு...