×

மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் அடிப்படை வசதி செய்து தர கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்

திருவள்ளூர், பிப். 28: கோடைக்காலத்தில் குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கோ.உமாமகேஸ்வரி கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் டி.தேசிங்கு மாவட்ட ஊராட்சி செயலாளர் கென்னடி பூபாலராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் எஸ்.சாந்திப்பிரியா, ச.விஜயகுமாரி, ஏ.ஹேமாவதி,  ஜெ.பாண்டுரங்கன், கோ.குமார், கோ.சுதாகர், எம்.சித்ரா, மு.சாரதம்மா, எம்.ஏ.ராமஜெயம், டி.தேசராணி, தே.அருண்ராம், த.தேவி, கி.கீதா, டி.தென்னவன், கே.யு.சிவசங்கரி, ச.சரஸ்வதி, ஜி.இந்திரா, ஆ.சதீஷ்குமார், இ.தினேஸ்குமார், ஏ.ஜி.ரவி, சு.சக்திவேல், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த செம்பரம்பாக்கம் ஏரியில் நெகிழி கழிவுகளை கொட்டுவதால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதித்து தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதால் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுன்சிலர் ஏ.ஜி.ரவி பேசினார். கொப்பூர், பாப்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் நோக்கத்தில் சமுதாய கூடம் அமைக்க வேண்டும். அதேபோல், திருப்பந்தியூர் கிராமத்தில் பழங்குடியினர் 200 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அங்கு நிரந்தரமாக மயான வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பொதுமக்களை சந்திக்கும் வகையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அறை ஒதுக்கவும் வேண்டும் என்றும் கவுன்சிலர் இ.தினேஷ்குமார் வலியுறுத்தினர்.

வரும் கோடைக்காலத்தில் சிற்றம்பாக்கம், எறையூர், குன்னவலம், நரசிங்கபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனால் ஆழ்குழாய் கிணறுகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கவும் சாலைகள் மேம்படுத்தவும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும். அதேபோல், அடையாளம்பட்டு, வானகரம் பகுதிகள் மாநகராட்சி ஒட்டிய பகுதிகளில் வருகிறது. இங்கு போதுமான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டுமென்றும், பள்ளிக் கட்டிடம் மற்றும் ரேசன் கடைகள் இடிந்து விழும் நிலையுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு மாவட்ட கவுன்சிலர்களும் தங்களது பகுதியில் உள்ள குறைகள் குறித்தும் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்தும் வலியுறுத்திப் பேசினர்.இதனை தொடர்ந்து மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கோ.உமாமகேஸ்வரி கோபாலகிருஷ்ணன் பேசுகையில், ‘‘கோடைக்காலத்தில் குடிநீர் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே குடிநீர் பிரச்னையை போக்கவும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கும் 24 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கும் முதல் கட்டமாக தலா ₹15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே அடுத்து வரும் கூட்டத்தில் கூடுதலாக நிதி ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Tags : District Panel Committee Meeting ,facilities ,
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...