திருச்சி, பிப்.28: திருச்சி மாவட்டத்தில் உள்ள 3,408 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு தேவையான வழிகாட்டி கையேடு சென்னையிலிருந்து திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தது. தமிழக முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்து, தேர்வான பிரதிநிதிகள் பொறுப்பேற்றுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் 404 பஞ்சாயத்துகளில் (ஊராட்சி) 3,408 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிதாக தேர்வான ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் கிராம ஊராட்சி நிர்வாகம் குறித்து அறிந்துகொள்வதற்காக தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூன்று விதமான வழிகாட்டி கையேடுகளை தயாரித்துள்ளது. முதல் கையேட்டில் கிராம ஊராட்சி நிர்வாகம் குறித்தும், 2வது கையேட்டில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் திட்டங்கள் குறித்தும், 3வது கையேட்டில் தமிழக அரசின் பல்துறைகள் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் உள்ள 3,408 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக ஒவ்வொரு பாகத்திலும் 3,408 பிரதிகள் சென்னையிலிருந்து அச்சாகி திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தன. அவை திருச்சி ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ளன. விரைவில் அந்தந்த யூனியன்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கு ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்து இந்த கையேடுகள் மற்றும் பை, பேனா, பேடு ஆகியவை வழங்கப்படும்.