மரக்கட்டையால் தாக்கப்பட்ட சம்பவத்தில் சிகிச்சையில் இருந்த மூதாட்டி உயிரிழப்பு

வானூர், பிப். 28:  திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் மரக்கட்டையால் தாக்கப்பட்ட சம்பவத்தில் படுகாயம் அடைந்து புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி பரிதாபமாக உயிர் இழந்தார். இவ்வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி வெளிமாநில வாலிபரை கைது செய்தனர். வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் அங்கம்மாள் (75). இவர் அதே பகுதியில் உள்ள நர்சரி கார்டன் எதிரே தங்கியிருந்தார். கடந்த 21ம் தேதி இரவு அந்த பகுதியில் தங்கியிருந்த கொல்கத்தாவை சேர்ந்த டராய் ஜெர்மி ஐடி ஜேம்ஸ் (24) என்ற வாலிபர் ரூமுக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த அங்கம்மாளிடம் தகராறில் ஈடுபட்ட போது அவர் கூச்சலிட்டார். உடனடியாக ஜேம்ஸ் அருகிலிருந்த மரக்கட்டையை எடுத்து அங்கம்மாளை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து ஆரோவில் இன்ஸ்பெக்டர் பொறுப்பு மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து தாக்குதல் நடத்திய வாலிபரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அங்கம்மாள் நேற்று காலை பரிதாபமாக உயிர் இழந்தார். அங்கம்மாள் இறந்ததால் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து அதன் அறிக்கையை கடலூர் சிறைக்கு அனுப்பிவைத்தனர்.

Related Stories: