×

பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்

புதுச்சேரி, பிப். 28: காரைக்கால்- இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்தை விரைவில் செயல்படுத்த குழு அமைக்கப்படும் என மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். புதுச்சேரி மாநிலம் காரைக்கால்- இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து  தொடங்குவது தொடர்பாக புதுவை தலைமை செயலகத்தில் மத்திய கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ் (சுற்றுலா), கந்தசாமி (துறைமுகம்), எம்பிக்கள் கோகுலகிருஷ்ணன், வைத்திலிங்கம், தலைமை செயலர் அஸ்வனிகுமார், காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜுன் சர்மா, இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள், இந்திய, இலங்கை துறைமுக துறை அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்குப்பின், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காரைக்கால்- இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்தை விரைவில் செயல்படுத்த புதுச்சேரி தலைமை செயலர் தலைமையில் சுற்றுலாத்துறை, துறைமுக துறை செயலர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். அந்த குழுவின் பரிந்துரையின் பேரில் திட்டம் குறித்து விரைந்து முடிவு செய்யப்படும். மேலும் இத்திட்டம் பொது மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் மத்திய, மாநில அரசுகளின் ஆதரவோடு செயல்படுத்தப்படும். இந்த கப்பல் போக்குவரத்து மூலம் ஆன்மிக பயணமாக புதுச்சேரிக்கு இலங்கையின் ஜாப்னா துறைமுகத்தில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இதனால் காரைக்காலில் சுற்றுலா, தொழில்துறை வளர்ச்சி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார். துறைமுக  அமைச்சர் கந்தசாமி கூறும்போது, இந்த திட்டம் தொடங்கப்பட்டால் இருநாட்டு மக்களுக்கு இடையேயான போக்குவரத்து அதிகரிக்கப்படுவதோடு, காரைக்கால் மாவட்ட வளர்ச்சிக்கு இத்திட்டம் பெருமளவு உதவியாக இருக்கும் என்றார். சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் கூறுகையில், கப்பல்  போக்குவரத்து தொடங்கிய பிறகு காரைக்காலில் இருந்து இலங்கையை 3 மணி  நேரத்தில் அடையலாம். இதற்காக 90 டாலர் முதல் 100 டாலர் வரை கட்டணம்  நிர்ணயிக்கப்படும். 4 ஆண்டு முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது.  நிதிச்சுமை இல்லாத வகையில் திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க  புதுச்சேரி அரசு தயாராக உள்ளது. இது குறித்து விரைவில் இறுதி முடிவு  எடுக்கப்படும் என்றார்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...