வார்டு மறுவரையறை ஆணைய கருத்துக்கேட்பு கூட்டம்

கள்ளக்குறிச்சி, பிப். 28:  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகர்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டுகள் மறுவரையறை ஆணைய கருத்துக்கேட்பு கூட்டம் வருகிற 5ம்தேதி நடக்கிறது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு தயார் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சார்ந்த ஒரு நகராட்சியின் வார்டுகள், 7 பேரூராட்சிகளின் வார்டுகள், 9 ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய கிராம ஊராட்சிகளின் வார்டுகள், ஊராட்சி ஒன்றியங்களின் வார்டுகள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டுகளின் மறுவரையறை வரைவு குறித்தான கோரிக்கைகள் கடந்த 18 ம் தேதி முதல் 22ம் தேதி வரை மனுக்களாக பெறப்பட்டுள்ளது.

மேலும் 25 ம்தேதி மாவட்ட ஆட்சியரால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி மனுக்கள் பெறப்பட்டது.

இக்கோரிக்கைகளின் மீது விவாதித்து முடிவு செய்ய பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துக்கேட்புக் கூட்டம் தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தால், வருகிற 5 ம்தேதி காலை 11 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. மறுவரையறை வரைவின் மீது கருத்துக்கள் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களுடைய கருத்துக்களை நேரில் ஆஜாராகி தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: