சேலம், பிப்.28: சேலத்தில் தொடர்ச்சியாக நடந்த 3 கொலை வழக்கில் பிடிபட்ட சைக்கோ வாலிபரை 2வது கொலை வழக்கில் சேலம் சிறையில் இன்று கைது செய்கின்றனர். சேலம் கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள நிழற்கூடம் பகுதியில், கடந்த 1ம் தேதி நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தை சேர்ந்த பெரியசாமி(65) என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். 2ம் தேதி திருவாக்கவுண்டனூர் பைபாஸில் வடமாநிலத்தை சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். 3ம் தேதி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வணிக வளாகத்தில் பொன்னம்மாபேட்டையை சேர்ந்த பழக்கடை வியாபாரியின் தந்தை அங்கமுத்து(60) என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தொடர்ந்து 3 நாட்கள் 3 கொலைகள் நடந்ததால் போலீஸ் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி யடைந்தனர். இந்த தொடர் கொலையில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பக்கமுள்ள சித்தேரியூரைச் சேர்ந்த ஆண்டிசாமி(19) என்பவரை டவுன் போலீசார் கைது செய்தனர். 3 கொலைகளையும் தானே செய்ததாக போலீசாரிடம் அவர் கூறினார். என்றாலும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அவரை கைது செய்தனர்.