×

வாடகை பாக்கி செலுத்தாததால் பேருந்து நிலையத்தில் 4 கடைகளுக்கு சீல் வைப்பு

நாமக்கல், பிப்.28: வாடகை பாக்கியை செலுத்தாததால் நாமக்கல் பேருந்து நிலையத்தில் 4 கடைகளுக்கு நகராட்சி அலுவலர்கள் அதிரடியாக “சீல்” வைத்தனர். நாமக்கல்  பேருந்து நிலையத்தில், நகராட்சி நிர்வாகம் சார்பில், 235 கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். இதில், 9 கடைக்காரர்கள் பல ஆண்டாக நகராட்சிக்கு உரிய வாடகை செலுத்தவில்லை. நகராட்சி நிர்வாகம் சார்பில் வாடகையை கட்ட பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், 9 கடைக்காரர்களும் சுமார் ₹12 லட்சம் வரை வாடகை செலுத்தவில்லை. இதையடுத்து, நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா உத்தரவுப்படி நேற்று வாடகை பாக்கி செலுத்தாத 4 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் பூட்டி “சீல்” வைத்தனர். அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து, 5 கடைக்காரர்கள் வாடகை பாக்கியை  உடனடியாக நகராட்சியில் செலுத்தி விட்டனர். பேருந்து நிலையத்தில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பழக்கடைகள், தள்ளுவண்டிகள் ஆகியவற்றையும் நேற்று நகராட்சி அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தினர். இதனால், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : shops ,bus stand ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி