கோவை, பிப்.28: அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய செல்போன் ‘ஆப்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த ஒரு மாதத்தில் 14 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகளின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாது, வெளிமாநிலங்களுக்கும் ஏசி பேருந்துகள், படுக்கை வசதி கொண்ட பேருந்துகள், டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில், தாங்கள் விரும்பும் இருக்கையை தேர்ந்தெடுத்து பயணிகள் எளிதாக முன்பதிவு செய்யும் வகையில் கடந்த ஜனவரி 28ம் தேதி செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 14 ஆயிரம் பேர் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். செயலி மூலம் 4,700 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த செயலி குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது: ‘TNSTC Official App’ எனும் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த பிறகு தமிழ் அல்லது ஆங்கில மொழியை தேர்வு செய்து, மின்னஞ்சல் முகவரி, பாஸ்வேர்டு, பெயர், பாலினம், செல்போன் எண் ஆகியவற்றை பதிவிட வேண்டும். பிறகு, மின்னஞ்சல் முகவரியை யூசர் பெயராக கொண்டு பாஸ்வேர்டை பதிவிட்டு ‘லாகின்’ செய்து கொள்ளலாம். ஒரே ஒருமுறை மட்டும் செயலியில் இவ்வாறு ‘லாகின்’ செய்தால் போதுமானது.