×

உத்தமபாளையம் அருகே போதிய பஸ் வசதியின்றி மாணவ, மாணவியர் அவதி

உத்தமபாளையம், பிப். 28: ராயப்பன்பட்டியில் படிக்கும் மாணவ, மாணவியரின் நலன்கருதி, கம்பம் மற்றும் உத்தமபாளையத்திலிருந்து ராயப்பன்பட்டி வழியாக அதிக அரசு பஸ்களை இயக்க வேண்டும் என மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.உத்தமபாளையம் அருகே, ராயப்பன்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் அதிகமாக படிக்கின்றனர். இந்நிலையில், உத்தமபாளையத்திலிருந்து கோகிலாபுரம், ராயப்பன்பட்டி, கே.கே.பட்டி வழியாக கம்பத்திற்கும், கம்பத்திலிருந்து கே.கே.பட்டி, அணைப்பட்டி, ராயப்பன்பட்டி, கோகிலாபுரம் வழியாக உத்தமபாளையத்திற்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரு சில அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், ராயப்பன்பட்டி  வழியாக போதிய பஸ் வசதி இல்லாததால், அங்குள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் வெளியூர் மாணவ, மாணவியர் காலை நேரங்களில் பள்ளிகளுக்கு செல்லவும், மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பவும் அவதிப்படுகின்றனர். மேலும், ராயப்பன்பட்டி மார்க்கத்தில் உள்ள கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவியரும் அவதிப்படுகின்றனர். கிராமப்புற மாணவ, மாணவியர் ராயப்பன்பட்டி செல்ல, பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம் உள்ளது. குறிப்பாக பஸ் பாஸ் உள்ள மாணவ, மாணவியர் அரசு பஸ்களை நம்பி நிற்கின்றனர். ராயப்பன்பட்டியில் பள்ளி முடிந்தவுடன் சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்ல மாணவ, மாணவியர் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, கிராமப்புற மாணவ, மாணவியர் ராயப்பன்பட்டிக்கு எளிதாக செல்ல உத்தமபாளையத்திலிருந்து கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி வழியாகவும், கம்பத்திலிருந்து கே.கே.பட்டி வழியாகவும் கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கூறுகையில், ‘கம்பம் பகுதியில் உள்ள ஏராளமான கிராமங்களில் இருந்து தினந்தோறும் மாணவர்கள் ராயப்பன்பட்டியில் உள்ள பள்ளிகளுக்கு செல்கின்றனர். ஆனால், போதிய பஸ்வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே, அதிக அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக ஆனைமலையன்பட்டி, கோகிலாபுரம், சுருளிப்பட்டி, நாராயணதேவன்பட்டி உள்ளிட்ட ஊர்களில் வழியாக அதிக பஸ் இயக்க வேண்டும்’ என்றனர்.

அறிவும் வளரணும்... அறிவியலும் வளரணும்... இன்று (பிப்.28) தேசிய அறிவியல் தினம் ஒரு மனிதனுக்கு அறிவு வளர்ச்சி மிக முக்கியமானது. ஒரு நாட்டுக்கு அறிவியல் வளர்ச்சி மிக மிக முக்கியமானது. இவ்வுலகில் எந்த ஒரு செயல்பாடும், அறிவியலை மையமாகக் கொண்டுதான் உருவாகின்றன. அது கண்ணுக்கு தெரிந்ததாகவும் இருக்கலாம். தெரியாததாகவும் இருக்கலாம். உதாரணத்திற்கு : புவி ஈர்ப்பு விசை போல. தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சிக்கு அடிப்படையே அறிவியல் ஆராய்ச்சிகள்தான். அதனால்தான் நாம் இருந்த இடத்தில் இருந்தே, பல விஷயங்களை அறிந்து கொள்ளவும் முடிகிறது. நேர விரயங்களை தவிர்த்து பல வேலைகளை, உட்கார்ந்த இடத்தில் இருந்தே செய்யவும் முடிகிறது. அந்த அறிவியலை போற்றி பாதுகாக்கத்தான், ஆண்டுதோறும் பிப்.28ம் தேதியன்று ‘தேசிய அறிவியல் தினம்’ என கொண்டாடி வருகிறோம்.

அதென்ன பிப்.28ம் தேதிஎன்கிறீர்களா? சர்.சி.வி.ராமனின் ‘ராமன் விளைவு’ பற்றி படித்திருப்பீர்கள். அப்போது உலக ஆராய்ச்சியாளர்களையே வியக்க வைத்தது ஆய்வு இது. இந்த விளைவுகளை அவர் உணர்வதற்கு ஒரு பயணம் காரணமாக இருந்தது என்றால் நம்புவது கடினம். ஆனால், அதுதான் உண்மை. 1921ம் ஆண்டு இந்தியாவிலிருந்து லண்டனுக்குச் சென்ற சர்.சி.வி.ராமன் நாடு திரும்பிக் கொண்டிருந்தார். மத்தியதரைக்கடல் வழியாக கப்பலில் பயணம் செய்த அவருக்கு, கடலின் நீல நிறத்துக்கு வெறும் வானத்தின் பிரதிபலிப்பு மட்டுமே காரணமாக இருக்க முடியாது என உறுதியாக நம்பினார். தண்ணீரிலுள்ள மூலக்கூறுகளால் சூரிய ஒளிச்சிதறல் ஏற்பட்டு கடல் நீல நிறமாகத் தோற்றமளிக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார். இதைத்தொடர்ந்து கொல்கத்தாவிலுள்ள அவரின் ஆய்வுக்குழு, பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு திரவநிலை மட்டுமல்லாது திடப்பொருள்களினாலும் ஏற்படும் ஒளிச்சிதறல் குறித்த அளவீடுகளைக் கண்டறிந்தனர்.

ராமனின் இந்தக் கண்டுபிடிப்பு மற்ற உலகப் புகழ் பெற்ற ஆராய்ச்சியாளர்களால் அங்கீகரிக்கப்பட்டது. தனது ஒளி விளைவு கோட்பாட்டை உறுதி செய்வதற்காக ராமன் லேசர் ஒளியைப் பயன்படுத்தியதன் மூலம், பின்னாளில் நாம் பயன்படுத்தும் கணினியுடன் கூடிய ஸ்பெக்ட்ரோமீட்டர் கண்டுபிடிக்கப்பட்டு இயற்பியல், வேதியியல், நுண்ணுயிரியியல், உயிர்வேதியியல், மருந்து உற்பத்தி தொழில்நுட்பம் முதலான அறிவியல்சார் ஆராய்ச்சிகளுக்குப் பயன்பட்டு வருகிறது. ஒரு மிகப்பெரிய அறிவியல் புரட்சியாக ‘ராமன் விளைவு’ கொண்டாடப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு அரிய நிகழ்வின் அறிமுக தேதியான 1928ம் ஆண்டு, பிப்.28ம் தேதியைத்தான், தேசிய அறிவியல் தினமாக கொண்டாடி வருகிறோம்.
தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு 1986ம் ஆண்டு முதன்முதலாக இந்தத் தினத்தை அறிவித்தது. அறிவியலைப் பரப்புவதற்காக நாட்டில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள், சிறந்த இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு தேசிய விருதும் இந்நாளில் வழங்கப்பட்டு வருகிறது. சர்.சி.வி.ராமனைப்போலவே எத்தனையோ இந்திய விஞ்ஞானிகள் உலகளவில், தங்களது பெயரை நிலைநாட்டினாலும்,
இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு குறைவு என்ற கருத்து பொதுவாக நிலவி வருகிறது. குறிப்பாக, பள்ளி அளவில் அறிவியல் ஆர்வமுடைய மாணவர்களை ஊக்கப்படுத்தி, ஆராய்ச்சியில் ஈடுபடுத்த பெரிய அளவில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்நிலை மாற வேண்டும்.இந்தியாவில் அறிவியல் ஆய்வுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இதற்காக நவீன அளவிலான மாபெரும் ஆய்வகங்களை தொடங்க வேண்டும். அப்போதுதான், நம் நாட்டில் இன்னும் பல சர் சி.வி.ராமன்கள் தோன்றுவார்கள்.

Tags : Student ,Uthamapalayam ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...