மதுரை, பிப்.28: கலெக்டர் வினய் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ‘‘மதுரை மாவட்டத்தில் அரசு அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியர் குறைதீர் நாள் கூட்டம் வரும் மார்ச் 18ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் காலையில் நடைபெற உள்ளது. இதற்காக ஓய்வூதியர்கள் தங்களது பலன்கள் பெறுவதில் உள்ள குறைகளைக் குறிப்பிட்டு, அதற்கான விண்ணப்பம், தொடர்புடையை ஆவணங்களுடன் 2 நகல்கள் வழங்க வேண்டும்.
அதில், ஓய்வூதியர் பெயர், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர் உறவுமுறை குறிப்பிட வேண்டும். ஓய்வூதிய புத்தக எண். கருவூலகத்தின் பெயர். பிரச்சனை தொடர்பாக சென்னை மாநில கணக்காயருக்கு அனுப்பப்பட்டிருந்தால், அதன் விபரம், கோரிக்கைகள், குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அலுவலர் மற்றும் அலுவலகத்தின் முகவரி, தொலைபேசி எண் உள்ளடங்கிய விபரத்தினை விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை வரும் மார்ச் 8ம் தேதிக்குள் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி தற்போதைய நிலை குறித்து தகவல் பெறப்படும். குறைகளையும் களைய நடவடிக்கை எடுக்கப்படும். இதில் மதுரை மாவட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மட்டுமே பங்குபெற வேண்டும். வெளி மாவட்டத்தில் பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக வரும் 18ம் தேதி நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.